Friday, March 18, 2016

கோட்டை ராணியும் என் சகுன அனுபவமும்


ஒவ்வொரு மனிதரிடம் இருந்தும் பாடம் கற்கலாம் என உணர்த்திய அனுபவத்தை தான் எழுதலாம் என்று இருக்கிறேன். என் பால்ய காலங்களில் நண்பர்களாலேயே  அதிகம் ஆக்கிரமிக்கப்பட்டவன் நான். நான் உறங்கும் நேரம் உணவருந்தும் நேரம் தவிர ஊரின் நடுவே இருக்கும் அரசமர்த்தடிதான் எங்கள் ஊரின் மொத்த இளசுகளுக்கும் வேடந்தாங்கல். கொஞ்சம் சினிமாத்தனமாக சொல்கிறேன் என நீங்கள் நினைத்தால் அதற்க்கு நான் பொறுப்பாளி அல்லன்.


அந்த வயது பால்யங்களுக்கு உண்டான குறும்பும் கேளிக்கைகளும் எனக்கும் உண்டு என்றாலும் அதில் நான் பங்கேற்பதில்லை. எட்ட இருந்து ரசிப்பதோடு சரி. என்னைப்பற்றி ஏதேனும் புகார் வந்தால் எங்கள் வீட்டின் காவல்துறை என் மீது நடவடிக்கை எடுத்து விடும் அந்த பயம் தான்.

இப்போது இருப்பது போல் கழிப்பிட வசதியால் பற்றி பெரிய அளவிற்கு விழிப்புணர்வு கொண்டதல்ல எங்கள் ஊர். காலையில் எழுந்தவுடன் எங்கள் ஊரிலே பெரிய பணக்காரர் ஒருவருடைய கொல்லையில் தான் எங்கள் ஊர் முழுவதும் சென்று எருவிடும். கதைக்கு செல்லும் முன் இந்த கதை நாயகியை பற்றி சொல்லியாகவேண்டும்.

வயது அப்போதே எழுபதை தொட்டு இருக்கும். குழி விழுந்த கன்னங்கள். சற்றே கூன் விழுந்த தேகம். என்னை என்னும் வஸ்துவையே பார்த்திராத நரைத்த தலை. மண்வாசனை காந்திமதி போல் பேச்சில் எப்போதும் ஒருவித அதிகாரம். இத்தனை விசயங்களுக்கும் சொந்தக்காரிதான் "கோட்டை ராணி". அவளுக்கு உண்மையான பெயர் எங்களுக்கு தெரியாது. ஏன் அவளுக்கு "கோட்டை ராணி" என்ற பெயர்  வந்தது என்றும் எங்களுக்கு தெரியாது.
ஒல்லியான, சுருக்கங்கள் விழுந்த சுமாரான உயரம். யாரையும் எடுத்து எரிந்து பேசும் குணம். வம்பு சண்டைக்கும் போவாள் வந்த சண்டையையும் விடமாட்டாள்.ரோட்டில் போகும் நாய் கூட இவள் வீடு வந்தால் வேகமாய் கடந்து போய் விடும்.

இப்படியாக இருந்த கோட்டை ராணியிடம் சுடு சொல் வாங்க போகிறோம் என தெரியாமலே விடிந்தது. வழக்கம் போல் என் நண்பனும் வந்தான். என்ன டா  மணி ஆச்சு... போலாமா என்றான். நானும் அவனும் கெளம்பி போய்கொண்டு இருக்கையில்....................திடீர் என எங்கள் எதிரில் வந்து நின்றால் கோட்டை ராணி. காலையில் வாசல் சுத்தம் செய்ய மாட்டு சாணம் அள்ள செல்கில்றால் போல் பட்டது. அவளை பார்த்து விட்டு போனால் எந்த காரியமும் நடக்காது என ஊர் முழுக்க பேச்சு. என் நண்பனுக்கு அது ஞாபகம் வந்துவிட்டது போலும். என்ன நினைத்தானோ அவளை பார்த்த மாத்திரத்தில் என் கையை பிடித்து வந்த வழியே திரும்ப இழுத்தான்.

நாங்கள் அவளை பார்த்து உடனே திரும்புவதால் கோட்டை ராணியும் கண்டுவிட்டாள். நாங்கள் திரும்பிய திசையை பார்த்து " ஏண்டா என்னை பார்த்துவிட்டு போனால் உங்களுக்கு வருவதும் நின்னு போயிடுமோ? என்று கேட்டாளே ஒரு கேள்வி. எங்கள் இருவருக்கும் என்ன சொல்வதென்றே புரியவில்லை. நான் ஒன்றுமே பேசவில்லை. என் நண்பன் ஏதோ சொல்லி சமாளித்து விட்டு வந்தான்.

அன்றில் இருந்து யாரும் சகுனம் என்று சொன்னாலே கோட்டை ராணியின் நினைவு வருவதை தவிர்க்க முடிவதில்லை. 

No comments:

Post a Comment